காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன், இடைக்கால தலைவர் சோனியா, இன்று ஆலோசனை நடத்துகிறார்
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் இரண்டாவது முறையாக படுதோல்வியடைந்ததையடுத்து, கட்சியில் தலைமைக்கு எதிராக, மூத்த தலைவர்கள் பலர் போர்க்கொடி துாக்கினர்.
கட்சித் தலைமைக்கு எதிராக, அவர்கள் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த பல மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களிலும், காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், கட்சியில், தலைமைக்கு எதிரான குரல் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, வரும் ஜனவரியில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில், கட்சியின் தலைவராக ராகுலை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சோனியா விரும்புகிறார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனும், அதிருப்தி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார்.முதல் கட்டமாக, டில்லியில், கட்சியின் தலைமை அலுலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.இதில், மூத்த தலைவர்கள், மன்மோகன் சிங், அந்தோணி, சிதம்பரம் மற்றும் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த் சர்மா ஆகியோருடன், கட்சியின் தலைவராக ராகுலை தேர்வு செய்வது பற்றி, சோனியா ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டத்தை, ம.பி., முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கமல்நாத் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதில், ராகுலும், கட்சி யின் பொதுச் செயலர் பிரியங்காவும் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தை தொடர்ந்து, அடுத்து வரும் நாட்களில், சோனியா, மற்ற அதிருப்தி தலைவர்கள் உட்பட, மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்தது ஆலோசிக்க உள்ளதாக, காங்., வட்டாங்கள் தெரிவித்தன.
மீண்டும் ராகுல் தலைவர்
இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த தலைவர் ரன்தீப் சூர்ஜேவாலா, ராகுல் மீண்டும் தலைவராக அறிவிக்க 99.9 சதவீத வாய்ப்புள்ளது. என்றார்.