தேசிய கிளர்ச்சி படையுடன் சண்டையிட்ட தலிபான்கள் படை பஞ்சஷிர் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முழு ஆப்கானும் தலிபான்கள் வசம் வந்து விட்டதால், விரைவில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆட்சி அமைக்கும் விழாவுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதும், தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றினர். அரசு படை தலிபான்களிடம் சரணாகதி அடைந்தது.
ஆனாலும், காபூலில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பஞ்சஷிர் மாகாணம் மட்டும் அடிபணியாமல் இருந்தது. அங்கு, தலிபான் எதிர்ப்பு படையான தேசிய கிளர்ச்சி படையை அகமது மசூத் வழிநடத்தி வந்தார். மேலும், தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்ட முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேவும் கிளர்ச்சிப் படைக்கு ஆதரவாக இருந்தார். பஞ்சஷிரை கைப்பற்ற ஆயிரக்கணக்கான தலிபான்கள் கடந்த சில நாட்களாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பஞ்சஷிரின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் நேற்று முழு பஞ்சஷிரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அறிவித்தனர். அங்கு தலிபான் கொடியை ஏற்றினர். இது குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபைதுல்லா முஜாகித் தனது டிவிட்டரில், ‘‘கூலிப்படை எதிரிகளின் கடைசி மாகாணமான பஞ்சஷிரும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது’’ என்றார். இதனை கிளர்ச்சிப் படை மறுத்தாலும், அகமது மசூத், அமருல்லா சலே எங்கிருக்கிறார்கள் என்ற தகவலும் தெரியவில்லை.
தலிபான்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் ஆட்சி செய்தால் ஒத்துழைக்க தயார் என ஏற்கனவே கிளர்ச்சிப் படை கூறியிருந்தது. இந்நிலையில், பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்கள், கிளர்ச்சிப் படையில் உள்ளவர்களும் தலிபான் படையில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் மீது பாரபட்சம் காட்ட மாட்டோம் என்றும், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற ஆப்கான் ராணுவ வீரர்களும் தலிபான் படையில் சேர அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சஷிர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தயாராகி விட்டனர். இந்த பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, ஈரானுக்கு தலிபான்கள் அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே திரை போட்டு தடுப்பு ஏற்படுத்தி இருபாலர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது