வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், தேதி டிசம்பர் 31ல் அறிவிக்க உள்ளதாகவும், டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாடு மற்றும என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று, ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தியும், அவரை தொடர்ந்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனும் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டார்.அந்த பதிவில், ஜனவரியில் கட்சி துவக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!. என அவர் பதிவிட்டுள்ளார்.