அமெரிக்க தேர்தல் களத்தில் ஜோபிடனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் இந்திய வம்சாவளியினர் ஆதரவு தனக்கு கிடைக்கும் என நம்பி வந்த ட்ரம்புக்கு அந்த நம்பிக்கை சற்று குறைய துவங்கியுள்ளது.
இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் தனி அமைப்புகள் மற்றும் தனி வெப் சைட்டுக்ளை துவங்கி ஜோபிடன் மற்றும் கமலாஹாரிசை ஆதரித்து பிரச்சாரம் செய்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை. அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்த்துச் சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு அதிபர் டிரம்ப், ‘சீனாவில் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ரஷ்யாவிலும், இந்தியாவிலும் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்றும் உங்களுக்குத் தெரியாது. இந்த நாடுகள் கொரோனாவால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகள் குறித்த தகவலை அளிக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.
இந்தியா குறித்த டிரம்பின் கருத்து, சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்ப் மற்றும் பிடன் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரோனா இறப்பு குறித்த விவரங்களை இந்திய முழுமையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் உலக வெப்பமயமாதல் குறித்து பேசும் போதும் அமெரிக்கா உலக வெப்பமயமாதலுக்கு 15 சதவீதம் பொறுப்பு என ஜோ பிடன் கூறினார்.
இதை மறுத்த டிரம்ப், அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
சீனா, இந்திய, ரஷ்ய நாடுகள் தொடர்ச்சியாக மாசினை காற்றில் கலந்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
கடந்த சில மாதங்கள் வரை மோடி என் நன்பர், இந்தியா எங்கள் நேச நாடு என தெரிவித்து வந்த ட்ரம்பின் பேச்சில் பெரிய மாற்றம் தெரிவதாக அமெரிக்க அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்..