கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி, ஐரோப்பிய யூனியனில் உள்ள, 27 நாடுகளில் துவங்கியுள்ளது.
பிரிட்டனில் முதல் முறையாக, இந்த தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள, 27 நாடுகளில், தடுப்பூசி வழங்கும் பணி நேற்று துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில், மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை, இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள, 27 நாடுகளில் மட்டும், 1.60 கோடி மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில், 3.36 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரிட்டனில், ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.ஜெர்மனியைச் சேர்ந்த, ‘பயோன்டெக்’ நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த,’பைசர்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த மருந்து வழங்கப்படாததால், ஜெர்மனி மக்கள் கொந்தளித்தனர்.
அதனால், ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகியவற்றில், தடுப்பூசி வழங்கும் பணி, ஒரு நாளுக்கு முன்னதாகவே துவங்கியது.சில நாடுகளில், மிகவும் வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் சில நாடுகளில், டாக்டர்கள், நர்சுகள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. ‘மாடர்னா’ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து, ஐரோப்பிய யூனியன், வரும், ஜன., 6ல் முடிவு செய்ய உள்ளது.இதற்கிடையே, அமெரிக்காவின் பாஸ்டனில், ‘மாடர்னா’ நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டர் உள்ளிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.