3.30 லட்சம் சிறார்களுக்கு பாலியல் கொடுமை – பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

SHARE

கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சின் கத்தோலிக்க சர்ச்களில், 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரியார், சிறார் பாலியல் வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் 75 சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனைவழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க சர்ச்களில், 1950ம் ஆண்டு முதல் 2020 வரை சிறாருக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து, ஜீன் – மார்க் சாவி என்பவர் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையம், 2,500 பக்கங்கள் உள்ள விசாரணை அறிக்கையை கத்தோலிக்க தலைமை திருச்சபைக்கு அனுப்பிஉள்ளது.

இரண்டரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையில் சிறார் மீதான பாலியல் கொடுமைகள்குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டுமே ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக 70 ஆண்டுகளில் கத்தோலிக்க சர்ச்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரியார்கள் உள்ளிட்டோர் குறித்து ஆணையம் ஆய்வு செய்தது. அதில், 3,000 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களில் மூன்றில் இரு பங்கினர் பாதிரியார்கள். இந்த வகையில் 3.30 லட்சம் சிறார்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இவற்றில் 40 பாலியல் குற்றங்கள் நடந்து மிக நீண்ட காலமாகி விட்டது. 22 குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டோரும் உயிருடன் உள்ளதால் வழக்கு தொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்ச்களில், சிறார் மீதான பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக 45 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்தினால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment