மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பசுவின் கோமியம் மற்றும் சாணம் உதவும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
போபாலில் நடைபெற்ற இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “பசுக்களின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றில் முறையான அமைப்பை ஏற்படுத்தினால், மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதற்கு திட்டமிட்ட சரியான நடவடிக்கை தேவை. இந்த இரண்டிலிருந்தும் உரம் முதல் மருந்து வரை ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மத்திய பிரதேச சுடுகாடுகளில் மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பசுக்களின் மூலம் அதிக லாபத்தை எப்படி பெறுவது என்பது குறித்து, கால்நடை மருத்துவர்களும், வல்லுனர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பசுக்கள் மற்றும் காளைகளின் உதவியில்லாமல் பல வேலைகள் நடக்காது. இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துதான், கால்நடை பராமரிப்பு மையங்களை அரசு ஏற்படுத்தியள்ளது. இருப்பினும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மையங்களை சிறப்பாக செயல்படுத்த முடியாது” என்று அவர் தெரிவித்தார்.