வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, முன்னாள் ராணுவ அதிகாரியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.,யுமான லக்மிந்தர் சிங் ஜகார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சிறை ஊழியர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை லக்மிந்தர் மறுத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங்கிற்கு தண்டனையை நிறைவேற்ற ஜகார் மறுத்தார். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார். பின்னர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், மாநில உள்துறை செயலருக்கு, லக்மிந்தர் சிங் ஜகார் எழுதியுள்ள கடிதத்தில் விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவான எனது முடிவை பரிசீலனை செய்து ஆய்வு செய்ய வேண்டும்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது முன்னோர்களின் விவசாய நிலத்தில் கிடைத்த வருமானம் மூலம் வளர்ந்தவன். இந்த நேரத்தில், எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால், நேற்று முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக எடுத்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.