பேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்களையும் தன்வசம் வைத்துள்ளது. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறால் சிக்கியதால், உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனிடையே பேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் ரீபிராண்டிங் செய்யப்படும் எனவும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், ஓகுலஸ் உள்ளிட்டவைகள் அதன் கிளை நிறுவனங்களாக மாறும் என்றும் கூறப்படுகிறது. பேஸ்புக்கின் வருடாந்திர மாநாடு வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை மார்க் ஸக்கர்பர்க் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தி வெர்ஜ் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தற்போது மெடாவெர்ஸ் என்னும் மெய்நிகர் உலகை படைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, மெய்நிகர் ரியாலிட்டி (வி.ஆர்) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏ.ஆர்) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இயற்கையான ஒரு பொருளை பயனர்கள் தங்கள் கற்பனை கண்களில் காண்பிக்க வைப்பதுதான் இந்த மெடாவெர்ஸ். இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பேஸ்புக் நிறுவனம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.