விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டம் குறித்து, அரசும் விவசாயிகளும் விரைந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொருட்களை எடுத்துச் செல்வது தடைபடுவதால், நாட்டின் பொருளாதாரத்தில், நாள் ஒன்றுக்கு, 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜவுளி, வாகன பாகங்கள், சைக்கிள்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற பொருட்களின் உற்பத்தி துறையினர், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கிடைத்த ஆர்டர்களில்,வெளிநாடுகளுக்கு உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், நம் தொழில்துறையின் மீதான நற்பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பும், கடந்த, 20 நாட்களில் போராட்டம் காரணமாக, டில்லி மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில், 10,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், டில்லிக்கு செல்லும் பொருட்களில், 30 – 40 சதவீத பொருட்கள் போய் சேரமுடியாமல், பாதிப்பு ஏற்படுவதாகவும் அசோசெம் தெரிவித்துள்ளது.