பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகள் மற்றும் ராக்கி கயிறுகள் அனுப்பியதால் ஹரியானாவில் உள்ள ஹிசார் தபால் பிரிவு ஸ்தம்பித்தது.
ஆயுள் தண்டனைராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரை சேர்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘தேரா சச்சா சவுதா’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். ஆன்மிக குரு என தன்னை அழைத்துக் கொண்ட இவருக்கு ஏராளமான சீடர்கள் உள்ளனர். சினிமா படங்களிலும் நடித்துள்ள இவர் தன் இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை வழக்கில் 2017ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த 15ம் தேதி 54 வயது நிறைவு பெற்றது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சீடர்கள் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வருகின்றனர். கடந்த 19 நாட்களில் சிதானி கிளை அஞ்சலகத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து அட்டைகள் அனுப்பியுள்ளனர்.அதேபோல் நாளை கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டும் ஏராளமானோர் குர்மீத் சிங்குக்கு ராக்கி கயிறு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து சிதானி அஞ்சலக தலைமை அதிகாரி ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போத பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குர்மீத் சிங் சீடர்கள் தினமும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து அட்டை மற்றும் ராக்கி கயிறு அனுப்பி வருகின்றனர். இவற்றை ‘டெலிவரி’ செய்ய 850 தபால்காரர்கள் வேலை செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையிலும் சிறப்பு டெலிவரி செய்யப்படுகிறது என்றார்