உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். ராகுல்காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை அழைத்து சென்ற காவல்துறையினர் பிறகு அவர்களை விடுதலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அக்டோபர் 12ஆம் தேதிக்குள் ஹாத்ராஸ் சம்பவம் குறித்து விளக்கமளிக்க மாநில உள்துறை, காவல்துறை மற்றும் ஹாத்ராஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.