கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட இந்தியாவில் 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.
நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.
இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது.
மராட்டியம், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தொற்றியல் தலைவரான மருத்துவர் சமீரன் பண்டா கூறும்போது, நாட்டில் கொரோனா 2வது அலை போன்று 3வது அலை மிக கடுமையாக இருக்காது.
கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முறையான கொரோனா அணுகுமுறைகள் ஆகியவை இந்த அலைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா பிளஸ் கொரோனா வகை மீது தடுப்பூசியின் விளைவு பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
இதுவரை 10 மாநிலங்களில் 49 டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது, 3வது அலை தொடங்கி விட்டதற்கு அடையாளம் இல்லை. இதனை 3வது அலை என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும் என அவர் கூறியுள்ளார்.