அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பிடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், இந்தியாவுடன் நிலையான, உறுதியான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என, அவரை ஆதரிக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல், நவ., 3ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிடுகின்றனர். இங்கே, 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெற, டிரம்பும், பிடனும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே, பிடனுக்கு அதிக ஆதரவு உள்ளது.இந்நிலையில், பிடனை ஆதரிக்கும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘ஓட்டளிக்கும் தர்மம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில்,தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு இணை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா பிஸ்வால் பேசும் போது: ஒபாமா அதிபராக இருந்த போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மிகச் சிறப்பாக இருந்தது என்றார்.ஜோ பிடன் அதிபரானால், இந்தியாவுடன் உறுதியான, நிலையான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்து மதத்தில், உண்மைக்கும், தர்மத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்து மதத்தின் மீது, ஜோ பிடன் மிகவும் பற்றுக் கொண்டுள்ளார். தன்னை, ‘இந்து மதத்தின் பெரும் ரசிகன்’ என, 2016ல் டிரம்ப் கூறினார். ஆனால், அதிபரான பின், அவரது நடவடிக்கைகள் பெரும்பாலும், இந்தியர்களுக்கு விரோதமாகவே இருந்தது.ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவில், இந்தியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்..