தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்துள்ளனர். மேலும், இவர்கள் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது
இதையடுத்து, மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்ததற்காகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதற்காகவும் இவர்கள் 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்ற நபர் ஜாமீனில் வெளிவந்து, அங்கிருந்து தலைமறைவாகி மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை.
இதனையடுத்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நள்ளிரவு நீடூர் சென்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் உதவியுடன் முகமது ஆசிக்கை கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர்.