19-ம் நூற்றாண்டில் கனடாவின் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி சேர்த்து மதமாற்றம் செய்தது, ஆயிரக்கணக்கான மாணவர்களின் மரணங்கள் தொடர்பாக போப் பிரான்ஸ் கனடா மண்ணிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் பழங்குடிகள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அந்நாடு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த போது பழங்குடியின மக்களுக்காக இந்திய உறைவிட பள்ளி முறை என்ற ஒன்று உண்டாக்கப்பட்டது.
இவற்றை ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் நிர்வாகம் செய்தன. இப்பள்ளிகள் பழங்குடியின குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து, கட்டாயப்படுத்தி சேர்த்து அவர்களது இனத்திலிருந்து மாற்றும் வேலையை செய்தது. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.
அங்கு மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த மொழியை பேசியதற்காக தாக்கப்பட்டுள்ளனர். உடல் மற்றும் பாலியல் ரீதியதான தொல்லைகளுக்கு அதிகம் ஆளாகியுள்ளனர். இதனை கனடா அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோய் மற்றும் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இப்பள்ளிகள் 1899 முதல் 1997 வரை இயங்கியுள்ளன. கடந்த மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிறிஸ்தவ உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் ரேடார் மூலமான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் சஸ்கேட்ஷீவான் மாகாணம், மேரீவல் இந்திய உறைவிட பள்ளியில் 600 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை கலாசார படுகொலை என கனடா பழங்குடியின தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதே கருத்தை வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கூறியுள்ளார். பழங்குடியின மக்கள் மீதான இத்தாக்குதலுக்கு கனடாவிற்கு நேரில் வந்து அவர்களிடம் போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதன் முக்கியத்துவம் தொடர்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போப் பிரான்சிஸ் தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஆனால் பழங்குடியின மாணவர்கள் விவகாரத்தில் சர்ச்சின் பங்கிற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.