தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை மறுநாள் அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மே 24 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளும் இன்றி அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு மே 24 காலை முதல் நடைமுறைக்கு வரும் .
இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.
* பொது மக்களுக்குதேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரிலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் .
*மின்னணு சேவை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை இயங்கலாம்* உணவகங்கள் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் நண்பகல் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 வரையிலும் பார்சல் சேவை அனுமதிக்கப்படுகிறது. ஸ்வக்கி, ஷாேமட்டா போன்ற மின் வணிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
* பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் .
* ஏ.டி.எம்., மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
* சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
* உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அனுமதிக்கப்படும்
* மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபாஸ் தேவையில்லை
* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
*தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
* பொது மக்கள் நலன் கருதி இன்று (மே 22) இரவு 9:00 மணி வரையிலும் நாளை ஒரு நாள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பஸ்கள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
* மே 24 முதல் இறைச்சி, மீன் கடைகள் ஒரு வாரத்திற்கு செயல்படாது
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.