உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் உச்ச நீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார்.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை இன்று வெளியிட்ட உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் இல்லாவிடில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 3 வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.