தமிழகத்தில், தடுப்பூசி, ஆக்சிஜன் செறிவூட்டிகள், உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பமனு அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவிட் பரவல் 2வது அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கோவிட் தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழகத்தில் தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் அதற்கான மனுவை அளிக்கலாம் என தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்கான கால அவகாசமாக மே 31ம் தேதியையும் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் டெண்டர் அழைப்பை ஏற்று, 45 நிறுவனங்கள் விருப்பமனு அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதில் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அரசும் தனியாரும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.