ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்துமாறு மாநகராட்சி அளித்த நோட்டீஸ்-க்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி கண்டனம் தெரிவித்ததால் வழக்கை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதனால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்,’ என அவர் தாக்கல் செய்த மனுவில், கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? என கேள்வியெழுப்பினார்.
மேலும், அதிக அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார். நீதிபதி கண்டனத்தை அடுத்து, அபராதம் விதிக்க வேண்டாம், வழக்கை திரும்பப் பெறுகிறோம் என ரஜினி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
பொதுமுடக்கமாக இருந்தாலும் சொத்து வரியை அனைவரும் செலுத்தும் நிலையில் ரஜிகாந்த் நீதிமன்றம் சென்றதும் நீதிமன்றம் அவரை எச்சரித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.