ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்பதை உடனே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் வாங்கிய தனிநபர் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தவணைகளையும் செலுத்துவதற்கு மார்ச் 1 முதல் ஆக., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வங்கிகள் வட்டி விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என தெரிவித்திருந்தது. கடந்த 5ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று (அக்.,14) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வட்டிக்கு வட்டி இல்லை என்பதை வங்கிகள் அமல்படுத்த தொடங்கி விட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கேட்பது நியாயமில்லை எனக்கூறிய நீதிபதிகள், ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களிடம் பொதுமுடக்க காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை உடனே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.