கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது’ என, மக்களவையில் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
மதுரை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன், ‘கொரோனா சிகிச்சையில் மத்திய ஆயுஷ் துறை எடுக்கும் ஆய்வு நடவடிக்கைகள் என்ன? பெருவாரியான மக்களுக்கு விநியோகிக்கப்படும் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள், கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்குமா மற்றும் அலோபதி – ஆயுஷ் கூட்டு மருத்துவ சிகிச்சைகளின் மேலாய்வின் நிலை என்ன?’ என, கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது எழுத்துபூர்வ பதிலில்,
தமிழகத்தில் மட்டும் 29 சித்த மருத்துவ ‘கோவிட் கேர் சென்டர்’கள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. இவற்றில், இதுவரை சித்த மருந்துகளால் மட்டும் 16,563 பேர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். ஏறத்தாழ 120 மெட்ரிக் டன் அளவிலான கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழுவீச்சில் இயங்கி வருகின்றன.

ஆயுஷ் துறையின் பிரிவான சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர், பிரமானந்த பைரவம், விஷசுரக் குடிநீர், மணப்பாகு, அதிமதுர மாத்திரை, தாளிசாதி சூரணம், சீந்தில் சூரணம் முதலான மருந்துகள் கொரோனா நோயில் பல கட்டத்தில் பயன்படுத்தப்பட அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடிநீரும் நில வேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளன. அந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம், சித்த மருந்தான கபசுரக் குடிநீருக்கு, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதையும், நோய் எதிர்ப்பாற்றல் தருவதையும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் பதிவு செய்திருக்கிறார்..