மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, ‘சிறுதுளி’ அமைப்பின் முயற்சியால், கோவையில் எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்படுகிறது. இதற்கான விழா நாளை நடைபெறுகிறது.
கோவையில், நீராதாரங்களை பாதுகாப்பது; காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பது மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மையை நடைமுறைப்படுத்துவதை, முக்கிய குறிக்கோளாக கொண்டு, சிறு துளி என்ற அமைப்பு செயல்படுகிறது. மேலும், கோவையை சுற்றியுள்ள பகுதிகளில், 7 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது இந்த அமைப்பு.
இதனிடையே,இசைத்துறையில் அழியா புகழ்பெற்ற, மறைந்த, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்ற, கடைசி காணொலி இசை நிகழ்ச்சியின்போது, ‘கோவிட் என்பது அன்னை பூமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் செலுத்தும் விலை’ என, குறிப்பிட்டிருந்தார்.

அன்னைக்கு நாம் இழைத்த பாதகத்தை மேலும் தொடராமல், இசைப்பிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை செயல்படுத்தும் வகையில், ‘சிறுதுளி’ அமைப்பு, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து, நாளை காலை, பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் என்ற பூங்காவை அமைக்கிறது.
அவர் வாழ்ந்த, 74 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 74 மரங்களை உள்ளடக்கிய நகர்ப்புற வனம் இங்கு உருவாக்கப்படுகிறது. இசைக்கருவிகள் உருவாக்க பயன்படுத்தப்படும் மரங்களின், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. , எஸ்.பி.பி,, புகழ்ந்து பாடிய, கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் மற்றும் அவரது பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பு மரமும், இசைக்குறிப்பு வடிவத்தில் நடப்பட உள்ளன.
சிறந்த இசை கலைஞருக்கு செலுத்தும் அஞ்சலியாக இது அமையும் என பேரூர் செட்டியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத் நியூஸ் ஏசியாவிடம் தெரிவித்தார்.சிறு துளி அமைப்பின் பெரு முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் சாந்தி பிரசாத் கூறினார்.
நாளை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, எஸ்.பி.பி., வனத்தை திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக, ‘கிரீன் கலாம்’ நிறுவனரும், நடிகருமான விவேக் பங்கேற்கிறார்.