இலங்கையில் கரை ஒதுங்கிய தரங்கம்பாடி மீனவர்கள் 4 பேரை, கைது செய்யாமல் நட்புடன் நடத்திய இலங்கை கடற்படையினர் 3 நாட்களுக்குப் பிறகு விடுவித்த சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை மற்றும் ராஜ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பினர். அப்போது படகில் டீசல் தீர்ந்ததால், படகு நடுக்கடலில் நின்றுள்ளது. பின்னர் வழிதெரியாமல் இலங்கை மாமுனை என்ற இடத்திற்கு சென்றடைந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகைக் கண்டதும் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் 4 மீனவர்களையும் தங்களுடன் அழைத்துச் சென்று, அவர்களை பாதுகாப்பாக தங்கவைத்து உணவு வழங்கியுள்ளனர்.
மீனவர்களை 3 நாட்கள் அங்கு வைத்திருந்த இலங்கை கடற்படையினர், பின்னர் அவர்களின் படகுக்கு டீசல் வழங்கி கோடிக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று காலை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த 4 மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். .
