தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு அவர் சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்.