தமிழகத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் 7 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
7-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளோம்.
கோவை-காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி-செங்கல்பட்டு ஆகிய சிறப்பு ரெயில்களை சென்னை வரை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. தமிழகம் முழுவதும் விரைவு ரெயில்களை இயக்கவும், மின்சார ரெயில்களை இயக்கவும் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் தெற்கு ரெயில்வேக்கு வரவில்லை. தமிழக அரசு கேட்டுக்கொண்டால் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்ற விரைவு ரெயில்கள், பயணிகள் ரெயில்களை இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும். அதேபோல் மின்சார ரெயில்கள் இயக்குவது தொடர்பாக வருகிற 15-ந் தேதிக்கு பிறகு பரிசீலனை செய்து, முடிவு அறிவிக்கப்படும்.
டிக்கெட் கவுண்ட்டர்களில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. கவுண்ட்டர்களிலும், ஆன்லைனிலும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. இன்னும் ஓரிரு நாளில் டிக்கெட் முன்பதிவு குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது