ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்
புதுடெல்லி
காங்கிரஸ் கண்டனம்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன படைகள் இடையேயான மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக கண்டித்து இருக்கிறார்.
சோனியா ஆலோசனை
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் விவகாரம், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும், கொரோனா பரவல் மற்றும் லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றியும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்
ராகுல் காந்திக்கு தலைவர் பதவி
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் , ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி மக்கள் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்துவதோடு, அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது இந்த கோரிக்கையை மாணிக்கம் தாகூர், கவரவ் கோகாய், ஆண்டோ அந்தோணி, குர்ஜீத் சிங் அவுஜிலா, உள்ளிட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் வழிமொழிந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த கோரிக்கை குறித்து கூட்டத்தில் சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
ராஜினாமா
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஆகஸ்டு மாதம் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக காங்கிரஸ் காரிய கமிட்டி நியமித்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை இப்போது மீண்டும் எழுந்து உள்ளது.